Thursday, April 16, 2009

துவங்கியது அழகிரியின் அட்டுழியங்கள்...

எதிர்பார்த்ததுபோலவே மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் வன்முறை வெறியாட்டங்களில் இறங்கிவிட்டனர். சொந்தக் கட்சி அலுவலகங்களுக்கே தீ வைத்தனர். அவர்களின் அராஜகத்திற்கு அப்பழுக்கற்ற சட்டமன்ற உறுப்பினர் நன்மாறன் இலக்காகியுள்ளார்.


புதனன்று இரவு சுமார் பதினொரு மணியளவில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு நன்மாறன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனமொன்றில் வந்த இருவர் அவரை வழிமறித்து கொலைவெறித் தாக்குதல்நடத்தினர். கழுத்து மற்றும் தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது.


மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார் மக்கள் நண்பன் நன்மாறன். மக்கள் வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு செல்ல முடியாது என்பது உறுதியாகிவிட்டதால் பண மற்றும் ஆட்பலத்தை நம்பி களத்தில் இறங்கியுள்ளனர். மதுரை மக்கள் இதையெல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். வாக்குப்பதிவு செய்யும் இயந்திரங்களின் பொத்தான்கள் கூட மே 16 ஆம் தேதியை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கின்றன.

Wednesday, April 15, 2009

திமுக அலுவலகம் எரிப்பு; மர்ம மனிதர்கள் யார்?


மதுரையில் நான்கு இடங்களில் செவ்வாயன்று நள்ளிரவு திமுக தேர்தல் அலுவலகங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. இது குறித்து திமுகவினர் நேரடியாக மார்க்சிஸ்ட் கட்சியினர் மீது புகார் கொடுத்திருக்கின்றனர். யார் எரித்தார்கள் என்றே தெரியாத நிலையில், நேரில் பார்த்த சாட்சிகள், தடயம் என்று எதுவுமே இல்லாத நிலையில் உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று கேட்டிருந்தால் அதில் நியாயம் இருக்கும்.

அதற்கு மாறாக, நேரடியாக மார்க்சிஸ்ட் கட்சியனர் மீது புகார் கொடுத்திருப்பது, மார்க்சிஸ்ட் கட்சி வன்முறை கட்சி என்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி, அரசியல்ரீதியாக பீதி ஏற்படுத்த முயல்வதைக் காட்டுகிறது.வன்முறை அரசியலுக்கு லீலாவதி போன்ற கட்சியின் அருமையான கண்மணிகளை இழந்தவர்கள் மார்க்சிஸ்ட்டுகள். அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் வன்முறை அரசியல் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் மார்க்சிஸ்ட்டுகள் என்பது மதுரை மாநகர மக்கள் நன்கு அறிந்ததே. அதே சமயம் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் சகிப்புத் தன்மை இல்லாமல் தீ வைப்பது என்பது மதுரை திமுகவினருக்கு கைவந்த கலை. தினகரன் பத்திரிகையில் வந்த கருத்துக் கணிப்புக்காக அந்த பத்திரிகை அலுவலகத்தை தீ வைத்து எரித்து மூன்று அப்பாவி இளைஞர்களை உயிரோடு கொளுத்தியவர்கள் யார் என்பதையும் மதுரை மக்கள் நன்றாக அறிவார்கள்.எனவே திமுகவினரே இந்த தீ வைப்பை நடத்திவிட்டு நாடகமாடலாம் என்றே பெரும்பான்மையான மக்கள் கருதுகின்றனர்.

இதுமட்டுமின்றி இந்த தீ வைப்பு சம்பவங்கள் பற்றி வேறு சில கருத்துக்களும் உலா வருகின்றன. மதுரை தினகரன் அலுவலகத்தை எரித்த ரௌடிகளை கலாநிதி மாறன், தயாநிதி மாறன் சகோதரர்களால் அப்போது சட்டத்தின் முன்பாக நிறுத்த முடியவில்லை. எனவே தற்போது தேர்தல் சூழ்நிலையை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அவர்களே இந்த பதிலடி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.அதேபோல் மு.க.அழகிரி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதை இளைய பட்டம் மு.க.ஸ்டாலின் விரும்பவில்லை என்றும் ஒரு கோஷ்டியினர் கூறுகின்றனர். எனவே அவர்களே கூட இது போன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் திமுகவிற்கு நெருங்கிய வட்டாரத்தினரே கிசுகிசுத்துக் கொள்கின்றனர்.

Tuesday, April 14, 2009

கடமையைச் செய்...

.....தமிழ்நாட்டில் இரண்டு பெரிய திராவிடக்கட்சிகளின் சார்பிலும் தோழமைக்கட்சிகளின் சார்பிலும் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களின் முக்கியத்தகுதியே, இவர் இத்தொகுதியில் கணிசமாக உள்ள இந்தப்பிரிவைச் சேர்ந்தவர். இவரால் எத்தனை கோடி ரூபாயை வேண்டுமானாலும் செலவழிக்க முடியும் என்பதுதான். கம்யூனிஸ்ட் கட்சி போன்றவற்றைச் சேர்ந்தவர்கள் விதிவிலக்காக இருக்கிறார்கள்.....

தினமணி தலையங்கம்(ஏப்.14)

Saturday, April 11, 2009

கலைஞருடைய ஆளா மோகன் எம்.பி....??

“கம்யூனிஸ்ட் எம்.பியே கலைஞருடைய ஆள்தான்” என்ற தலைப்பில் ஜூனியர் விகடன்(ஏப். 12, 2009) பத்திரிகையில் கற்பனைக் கதை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. புலனாய்வு இதழ் என்று தன்னைக் கூறி கொள்ளும் ஜூனியர் விகடன் கதையில்லாத குறையை இத்தகைய கட்டுக் கதைகளை வெளியிட்டு பக்கங்களை நிரப்புவது பரிதாபகரமானது. அதுவும், மொட்டை கடுதாசி என்று அந்தப் பத்திரிகையே கூறிக் கொண்டு தற்போதை எம்.பி. மோகனின் அப்பழுக்கற்ற அரசியல் பணியை இழிவு படுத்த முயன்றுள்ளது.

இனிமேல், மொட்டைக் கடுதாசி எழுதுபவர்கள் சிரமப்பட வேண்டாம். ஜூ.வி. முகவரிக்கு அனுப்பிவிட்டால் போதும் எத்தனை பக்கம் இருந்தாலும் அவர்கள் அதை பிரசுரித்துவிடுவார்கள்.முதல்வரோடு மோகன் தொலை பேசியில் பேசினார் என்பது இதில் கூறப்பட்டுள்ள ஒரு குற்றச்சாட்டு. மக்கள் பிரதிநிதி என்ற முறையில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் முதல்வர் பொறுப்பில் உள்ள ஒருவரோடு பேசியது தவறா? முதல்வர் கருணாநிதியை மோகன் ரகசியமாக சந்தித்த செய்தி முரசொலி ஏட்டில் வெளியாகிவிட் டது என்று மேலும் ஒரு அவதூறு. முரசொலி ஏட்டில் வெளியாவது எப்படி ரகசிய சந்திப்பாகும் என்று தெரிய வில்லை. மோகன் ரகசியமாக முதல் வரை சந்திக்கவில்லை. எல்லீஸ் நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் குடியிருக்கும் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பாக முதல்வரை அவர் சந்தித்திருக்கிறார்.

“மதுரை சங்கம் ஓட்டல் கை மாறிய பஞ்சாயத்தில் இவரும் பெரிய அளவில் கவனிக்கப்பட்டார்” என்றும் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யை கூசாமல் வெளியிட்டுள்ளது இந்த ஏடு. மோகன் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றி வந்துள்ள 10 ஆண்டு காலத்தில் எந்தவிதமான பேரத்திலோ, கட்டபஞ்சாயத் திலோ ஈடுபட்டதில்லை, நயா பைசா பெற்றதில்லை என்பதை கட்சியின் அரசியல் எதிரிகள் கூட ஒத்துக் கொள்வார்கள். தொகுதி மேம்பாட்டு நிதி பணிகளில் கமிஷன் கேட்டதாக யாரும் விரல் நீட்டி குற்றம் சாட்ட முடியாது. அண்மையில் வெளியான சண்டே இந்தியன் வார இதழ், நேர்மையான எம்.பி.க்கள் என்று போட்ட பட்டியலில் மோகன் பெயரும் இருந்தது. மோகனின் கட்சிக்கு அரசியல் ரீதியாக எதிர் துருவத்தில் நிற்கும் காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ தெய்வநாயகம் கூட அந்தப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், மோகனுக்கு நற்சான்றிதழ் வழங்கியிருந்தார்.

தினகரன் பத்திரிகை எரிப்பு சம்பவம் நடந்த போது, மோகன் தாமதமாகவே தலையிட்டார் என்பது மொட்டை கடுதாசியில் கூறப் பட்டுள்ள மற்றொரு அவதூறு. முதல் வர் கருணாநிதியின் குடும்ப பிரச் சனை காரணமாக மதுரை தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டு மூன்று அப்பாவி உயிர்கள் பறிக்கப்பட்டது. இந்த வன்செயல் நடந்தவுட னேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ‘குற்றவாளிகளை கைது செய்’ என்ற முழக்கத்தோடு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மோகனும் பங்கேற்று உரையாற்றினார். மதுரையே அச்சத்தின் பிடி யில் உறைந்திருந்த போது மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய ஆர்ப்பாட்ட மும், அதில் மோகன் ஆற்றிய உரையும்தான் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. மொட்டை கடுதாசிகளால் இந்த உண்மையை முனை மழுங்க செய்யமுடியாது.

திமுக பிரமுகர் ஒருவர் வீட்டில் பணியாற்றிய நர்ஸ் கற்பகவள்ளி மர்மமான முறையில் இறந்த போது நீதி கேட்டு போராடுவது என்று மார்க்சிஸ்ட் கட்சியும், மாதர் சங்கமும் முடிவெடுத்தது. மாதர் சங்கம் சார்பில் மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திலும் திருமங்கலத்தில் கட்சியின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திலும் கட்சியின் பிற தலைவர்களோடு மோகனும் பங்கேற்றார்.சன் டி.வி. நிர்வாகத்திற்கும் மு.க.அழகிரிக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் அழகிரி மகனால் ராயல் கேபிள் விஷன் துவக்கப்பட்டு அதில்தான் சேர வேண்டும் என்று கேபிள் ஆப்ரேட்டர்கள் மிரட்டப்பட்டனர். அப்போது, கேபிள் ஆப் ரேட்டர்களுக்கு ஆதரவாக மோகன் குரல் கொடுத்தார். தினகரன், தமிழ் முரசு நாளேடுகளிலேயே இதற்கான ஆதாரம் உள்ளது.

அதே போன்று சன் டி.வி. நிர்வாகத்தால் வெளியிடப் பட்ட திரைப்படத்தை மதுரையில் வெளியிட ‘தடை’ விதிக்கப்பட்ட போதும், மார்க்சிஸ்ட் கட்சி இதை எதிர்த்து போராடியது. மோகனும் களத்தில் முன்நின்றார்.திமுக முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் மதுரையில் படு கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அரசியல் ரவுடித்தனத்தை எதிர்த்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற மாபெரும் மாநாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியது. கேரள மாநில முன்னாள் முதல்வர் இ.கே.நாயனார், கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் ஆகியோரோடு மோகனும் அந்த மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார். மாணவப் பருவத்திலேயே பொதுவுடைமை இயக்கத்தில் தம்மை இணைத்து கொண்ட தோழர் மோகன், கட்சி நடத்தும் அனைத் துப் போராட்டங்களிலும் தவறாமல் பங்கேற்று வருபவர்.

நாடாளுமன்ற உறுப்பினராக இரண்டு முறை இருந்த போதும் ஒரு கட்சி ஊழி யராக, மக்கள் சேவகராகவே தன்னை முன்னிறுத்திக் கொள்பவர்.எம்.பி. மோகன் மக்களோடு மட்டும் உறவு பாலம் அமைத்திருப்பவர். மொட்டை கடுதாசி எழுதுபவர்களாலோ அல்லது குறைந்தபட்ச பத்திரிகை தர்மத்தைக் கூட பார்க்காமல் அதை வெளியிடுபவர்களாலோ அந்த பாலத்திலிருந்து ஒரு செங்கலைக் கூட உருவ முடியாது.

Thursday, April 9, 2009

நீங்க நல்லவரா கெட்டவரா?

மதுரையில் அழகிரி நிற்கிறார் என்றவுடன் காம்ரேடுகள் வெலவெலத்துப் போய்விட்டார்கள் என்று பத்திரிகைகள் எழுதிக்கொண்டிருந்தன. முதல்வரும் அந்தக்கருத்தை தத்து எடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் அதோடு நிற்கவில்லை. அறிக்கை என்ற பெயரில் சகட்டு மேனிக்கு ஏச்சுப் பேச்சில் இறங்கியுள்ளார். வெலவெலத்துப்போயுள்ளார்கள் என்பது ச்ச்சும்மாhh... பத்திரிகைகள் கிளப்பி விட்டதுதான் என்ற உண்மை அவர் வீட்டுக்கதவைத்தட்டியுள்ளது.

காம்ரேடுகளோ, தொகுதியில் நடக்கும் அராஜகங்களைக் கண்டித்து ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களைத் திரட்டி பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்குப்பிறகுதான் முதல்வரின் கைகள் பேனாவைத் தேடியுள்ளன. மகன் தோற்றுவிட்டால் என்ன ஆவது என்ற பயம் அவரைத் தொற்றிக் கொண்டது. அந்த பயம் எழுத்தில் தெரிகிறது. பணபலத்தைத் தாண்டி எந்த பலத்தை பிரயோகப்படுத்தலாம் என்று உடன்பிறப்புகள் தேட வேண்டிய கட்டாயத்தை இந்தக் கடிதம் ஏற்படுத்தியுள்ளது.இக்கடிதத்திற்கு சிபிஎம் செயலாளர் என்.வரதராஜன் பதிலடி கொடுத்துள்ளார். கலைஞரின் கடிதத்திற்கும், வரதராஜனின் கடிதத்திற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. கலைஞரின் கடிதத்தில் ஆத்திரத்தின் காரணமாக நாகரீகம் மி°ஸிங். ஆனால் என்.வரதராஜனின் கடிதம் அரசியல் ரீதியான பதிலாக அமைந்துள்ளது. அதில் பொருத்தமாகவே, அச்சமில்லை.. அச்சமில்லை... அச்சமில்லையென்பதே... என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்களின் அரசியல் விவாதங்கள் ஒருபுறம். மதுரை மக்கள் எங்கு நிற்கிறார்கள்..? இவர்கள் முன்னால் இருக்கும் கேள்வி மிக முக்கியமானது. மதுரையிலிருந்து வந்த நண்பர் ஒருவர் குறிப்பிட்டார். சில மாதங்களுக்கு முன்பு மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்த கடைகளில் இருந்த விலைக்கும் தற்போதுள்ள விலைக்கும் பெரும் வேறுபாடுகள் உள்ளன. அந்தக்கடையில் ஒரே ஒரு மாற்றம்தான் ஏற்பட்டுள்ளது. முன்பு அக்கடைகளில் மு.க.அழகிரியின் படம் தொங்கவில்லை. தற்போது தொங்கிக்கொண்டிருக்கிறது. கடைக்காரர்கள் தங்கள் இஷ்டத்திற்கு விலையை நிர்ணயித்துக்கொள்ள லைசன்° போல நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவையெல்லாம் அழகிரி என்ற பெயருக்குப்பின் எதுவும் இல்லாதபோது நடக்கிறது. ஒருவேளை எம்.பி.யாகிவிட்டால், இத்தகைய அராஜகங்களுக்கு மக்கள் அங்கீகாரம் கொடுப்பது போலாகி விடும். இவையெல்லாம் பற்றி மக்கள் விவாதிக்காமல் இல்லை. சிலர் ப°ஸில், ரயிலில், கார்களில்... இன்னும் சிலர் அக்கம்பக்கத்தில்... பெரும்பாலானவர்கள் தங்கள் மனதுக்குள்ளேயே... நிறைவாக, அருகில் இருப்பவர்களிடம் அனைவருமே கேட்க விரும்பும் கேள்வி இதுதான்...

நீங்க நல்லவரா... கெட்டவரா...??

நல்லவராக இருந்தால் நல்லவருக்கு வாக்களியுங்கள். கெட்டவராக இருந்தால்.....????